Friday, April 15, 2016

தெறி படம் விமர்சனம்



விஜய் நடிப்பில் வெளியாகும் 59-வது படம், அட்லி இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம், இயக்குநர் மகேந்திரன் வில்லனாக நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகும் 50-வது படம் ஆகிய இந்தக் காரணங்களே 'தெறி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

டீஸர், ட்ரெய்லர் தந்த நம்பிக்கையில் 'தெறி' படம் பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கதை: குற்றச்செயல் புரிந்த அமைச்சர் மகனை போலீஸ் அதிகாரி விஜய் தண்டிக்கிறார். அதனால் பிரச்சினைகளில் சிக்கி குடும்பத்தை இழக்கிறார். அதற்குப் பிறகும் விரட்டும் வில்லன் கும்பலை விஜய் என்ன செய்கிறார்? வில்லன்கள் என்ன ஆகிறார்கள்? விஜய் மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா? என்பது மீதிக் கதை.

விஜய் போலீஸ் அதிகாரி என்பதால் வழக்கமான மாஸ் இன்ட்ரோ இருக்கும் என்று எதிர்பார்த்தால் வெகு சாதாரணமாக விஜய்க்கு இன்ட்ரோ கொடுத்திருந்தனர். ஆனால், அதற்கும் சளைக்காமல் ரசிகர்கள் கொடுத்த கரவொலியும், விசில் சத்தமும் தியேட்டரை அதிரச் செய்தது.

கெத்தான போலீஸ் அதிகாரி, அன்பான அப்பா, பாசமான மகன், பிரியமான காதலன் என்று கொடுத்த கதாபாத்திரத்தில் தன் ஃபிளேவர் கலந்து கம்பீரம் காட்டுகிறார் விஜய். நைநிகாவிடம் மொக்கை வாங்கும் காட்சிகளிலும் கிளாப்ஸ் அள்ளுகிறது. டான்ஸ், ஹஸ்கி வாய்ஸில் காமெடி பண்ணுவது, கண்ணீரில் கலங்குவது, சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் வழக்கம் போல் விஜய் வெரைட்டி காட்டி கவர்கிறார். அதிலும் தனுஷின் ஒத்த சொல்லால பாட்டுக்கு ஆட்டம் ஆடுவது அசத்தல். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையிலும் சில சங்கதிகளை விஜய் செய்திருப்பதும் ரசிக்கத்தக்கது.

நைநிகா ச்சோ ஸ்வீட். ஏமி ஜாக்சனிடம் 'உங்களுக்கு லவ் பண்ண ஐடியா இருக்கா?' என கேட்பது, 'நான் என்ன சொன்னாலும் நம்புற. நீ மொக்க பேபி' என விஜய்யை கலாய்ப்பது, சின்ன சின்ன ரியாக்ஷன்களில் குழந்தைமையை வெளிப்படுத்துவது, சேட்டைகள் செய்வது என நிறைவாக நடித்திருக்கிறார். அந்த விதத்தில் நைநிகா தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. மொத்த நடிப்பையும் வாங்கிய இயக்குநர் உள்ளிட்ட குழுவுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

'நான் கடவுள்' ராஜேந்திரன் குணச்சித்ர நடிப்பு க்ளாஸ். 'நான் நர்ஸ் இல்லை டாக்டர்' என்று சொல்லும் சமந்தாவிடம், 'நான் மொட்டை இல்லை. கான்ஸ்டபிள்' என்று பன்ச் பேசி கைதட்டல் வாங்குகிறார். 'ஐ யம் வெயிட்டிங்' என்று விஜய்யிடம் சொல்லி சிரிப்பை வரவழைக்கிறார்.

இயக்குநர் மகேந்திரன் பார்வையால் மிரட்டுகிறார். ஆனால், உடல்மொழி, வசனங்கள் போன்ற தோரணைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒற்றைப் பார்வையில் காதலில் விழும் சமந்தா அதற்கு தரும் விளக்கம் அழகு. நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். ஏமி ஜாக்சன் கதாபாத்திரத்துக்கான தேவையை நிரப்புகிறார்.

ராதிகா, அழகம்பெருமாள், பிரபு, காளிவெங்கட், கல்யாணி நடராஜன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ஜார்ஜ்.சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்துக்குப் பெரும் பலம். ஈனா மீனா டீக்கா, ஜித்து ஜில்லாடி, செல்லக்குட்டி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆண்டனி எல்.ரூபனின் எடிட்டிங் கச்சிதம்.

ஆடை வடிமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் கோமல் ஷஹானி, தீபாலி நூர், சத்யா ஆகிய மூவரின் ஸ்மார்ட்னெஸ் கவனிக்கத்தக்கது.

ஷங்கர் அசிஸ்டன்ட் என்பதை பாடல் காட்சிகளில் கலர்ஃபுல் காட்டி நிரூபித்திருக்கிறார் இயக்குநர் அட்லி.

போலீஸ் அதிகாரி கதை என்றால் செய்த கடமைக்காக எதிரிகள் உருவாவது, அவர்கள் குடும்பத்தைப் பழிவாங்குவது என்பது வழக்கமும் பழக்கமுமான கதைதான். ஆனால், அதற்காக 'பாட்ஷா', 'ரமணா', 'சத்ரியன்' என்று எல்லா படக் காட்சிகளையும் ஒரே மிக்ஸியில் அரைத்து குருமா பண்ணால் எப்படி சாரே? அடுத்த படத்திலாவது இந்த ரிப்பீட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அட்லி.

பேய் டிரெண்டையும் பயன்படுத்தி சின்ன வெள்ளோட்டமும் பார்த்திருக்கிறீர்களே. ஏன் பாஸ்?

சமந்தாவின் குடும்பம் என்ன ஆகிறது? திடீர் என்று மக்கள் கருத்து கேட்பது ஏன்? போன்ற சில கேள்விகளும் தொக்கி நிற்கின்றன.

இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் விஜய் ரசிகர்களை எங்கேஜ் செய்த விதத்தில் 'தெறி'யில் தப்பவில்லை குறி.



No comments:

Post a Comment